Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

Lockdown 2020 – ஊரடங்கு 2020

Lockdown 2020 - ஊரடங்கு 2020
Lockdown 2020 - ஊரடங்கு 2020

Story Highlights

  • வாழ்க மக்களாட்சி! வாழ்க ஊரடங்கு

Lockdown 2020 – ஊரடங்கு 2020

பொறுப்பு துறப்பு: இது முழுக்க முழுக்க சுய பரிசோதனைப் பதிவு. இப்பதிவின் கருத்துக்கள், முழுக்க எம் பார்வையில்தான் எனினும், தங்கள் மாற்றுக்கருத்துகளையும் வரவேற்கிறோம். முடிந்த வரை, யாரையும் புண்படுத்தாமல் பதிவு செய்ய முயல்கிறோமெனினும், இயற்கையாய், பழி சொல்லும் வாக்கியங்களுக்காக மன்னிக்கவும்!

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊரடங்கு உத்தரவு! மக்களுக்காக, மக்களின் அரசால் என்பதில் சிறு கர்வமும் மகிழ்ச்சியும் தான். புதிதென்பதால் சிறிது அச்சம் கலந்த பயமும்தான்!

 

Covid

‘கொரோனா வைரஸ்’ பற்றிய பதிவுகள், ஆய்வுகள், செய்திகள் அரசின் அனுமதியின்றி, பதிய தடை உள்ளது என்பதே, சமூக வலைத்தளங்கள் மற்றும் அதைப் பயன்படுத்தும் மக்களின் மீதான மதிப்பீடுகளையும், அறிந்து கொள்ள உதவும். வலைதளங்களில் பதிவு செய்யப்படும் செய்திகளின் உண்மைத்தன்மையும் கேள்விக்குரியதே.

‘கொரோனா நோய்’ பற்றி அரசு, வெளியிடும் தகவல்கள் மட்டுமே, நம்பகமானவையாக எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், இந்நோய் பற்றிய செய்தி வெளியீடுகள் (அரசாங்கம் வெளியிடுவதில் கூட) நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருகிறது; வந்திருக்கின்றன.

நோயின் அறிகுறிகள், தாக்கம், பாதிப்பு, அறிகுறியின்மை, நோய்க்கிருமியின் தன்மை, வீரியம், அது பரவும் முறை ஆகியவை பற்றிய செய்திகள், ஒவ்வொரு நாளும், மாறி, மாறி வெளியிடப்படுவதிலிருந்தே, இந்நோய் பற்றிய புரிதல் மற்றும் நம் மருத்துவ அறிவு பற்றி, அறிந்து கொள்ளலாம்.

 

எனவே, தற்சமயம் அரசின் அறிவிப்பின்படி, இந்நோய் பற்றி சிறிது ஞாபகப்படுத்திக் கொள்ள விழைகிறோம்!

 

கொரோனா நோய்

இதை, ஒரு ‘சர்வதேச பரவல் நோய்’ என்று அறிவித்து உள்ளனர். இதன் தோற்றம், சீனாவின், ‘வூகான்’ மாகாணம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

(முறை சாரா, அசைவ விற்பனைச் சந்தையிலிருந்து உருவாகியது என்று, முதலில் அறியப்பட்டாலும், தற்சமயம், இக்கிருமி, மனித குல விரோதமிகு, ஒரு சோதனைக்கூடத்திலிருந்து, திட்டமிட்டு பரப்பப்பட்டது என்று ஒரு கதையும், அப்படிப்பட்ட ஒரு சோதனைக்கூடத்திலிருந்து, தவறுதலாக அல்லது முறைகேடாக ‘வூகான்’ சந்தையில் விற்கப்பட்ட விலங்கின் மூலம் பரவியது என்று ஒரு கதையும் நிலவி வரும் அதே வேளையில், சீன அரசாங்கம் பிணம் போல் சாதித்து வரும் மௌனம், அதன் சாதாரண வியாபார யுக்திகூட, மனித குலத்தின் மாபாதகமாய் உணரப்படுகிறது)

 

கொரோனா பற்றிய உலக அரசியலை சற்று நேரம் தள்ளி வைத்து விட்டு முதலில் நோயைப்பற்றி காண்போம்

  • நோயின் அறிகுறிகளாக சளி, இருமல், காய்ச்சல் அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
  • அறிகுறிகளே இல்லாமலும், இவ்வைரஸ் தாக்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
  • நோய்த்தொற்று: நேரடியாக பாதித்தல், தொடர்புகள் மூலம் பரவுதல், சமுதாயத் தொற்று என்ற விதத்தில் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
  • முதலில், இவ்வைரஸ், குறைந்த பட்சமாக ’20 டிகிரி செல்சியஸ்’ வெப்ப நிலையில், ஒரு நிமிடத்திற்குள் இறந்துவிடுவதாகவும், தனி மனித நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தும், இவ்வைரஸ் பரவாமல் இறப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • சமூக இடைவெளி, முகவுறை, அடிக்கடி, சோப்பைக் கொண்டு, குறைந்தது 20 வினாடிகள் கழுவுதல், கண், மூக்கு மற்றும் வாயை கைகளால் தொடுவதைத் தவிர்ப்பதும், நோய் பரவாமல் காக்கும் முறைகளாக, விளம்பரப்படுத்தப்படுகின்றது.

 

Lockdown 2020 – ஊரடங்கு 2020

நோயைப் பற்றிய தெளிவான புரிதலின்மையே, இவ்வூரடங்கின் வெளிப்பாடாய் எண்ணத் தோன்றுகின்றது. ” இந்த ஊரடங்கு 2020 – Lockdown 2020ன் நிலை ‘யாரையோ’ பார்த்து தான் சூடு போட்டுக்கொண்டது போல்”, ஆகிவிட்டது. பாதித்திருந்தால் தெரியும், பாதுகாப்பாய் கடந்த பிறகு, பேசுவதற்கு என்ன? என்றால்..!,

ஊரடங்கை, ஒருமுறை அறிவித்தது சரி;

அப்போது, போதிய விழிப்புணர்வு, மருத்துவ வசதி, கையாளும் சக்தி போன்றவை இல்லாமல் அல்லது ஆயத்த நிலையிலில்லாமல் இருந்திருக்கக்கூடும்.

முதல் முறையாக, ஊரடங்கை அறிவித்த போது, புதிதாக இருந்ததாலும், ஏதோ பேராபத்தை எதிர்கொள்ள, உள்ளிருந்து போராடுகிறோம் என்கின்ற மாயையில், கூட்டுக்குள் ஒளிந்து வாழ்வதாய்  நினைத்து, ஆர்வக்கோளாறில், ஒரு தவறான முன்னுதாரணத்தை செயல்படுத்தி விட்டோமென்றே இன்று எண்ணத் தோன்றுகிறது.

இவ்வையத்தின் இதயமே, இயக்கம் தான். இவ்வுலகத்தின் ஒரு உறுப்பான மனிதரும், இயங்குவதே ஊக்கம் தருமே ஒழிய, ஊரடங்கு என்ற பெயரில் முடங்குவதன்று! ஆனால், அதுவே நிரந்தர தீர்வு என்ற ரீதியில் செயல்படுவதெல்லாம், தத்தம் கடமை விலகலே அன்றி வீரமோ – விவேகமோ அன்று

 

நோய் பரவல் – உலகப் பரவல் (Pandemic) 

சீனாவிலிருந்து இந்நோய் தங்கள் நாடுகளுக்குப் பரவாமல் தவிர்க்க, இதர கிழக்காசிய நாடுகள் கைக்கொண்ட முறையே, நமக்கு படிப்பினை என்பது, ஒரு ஆரம்ப கட்ட தற்காற்பே அன்றி, நிரந்தர பாதுகாப்பு வழிமுறையன்று!.

வட கொரியாவும், தென் கொரியாவும், ஜப்பானும் போல், நடந்து கொள்வதாக நினைத்துக்கொண்டு, யானையும், மண்ணுக்குள் ஒளிந்து, பிழைத்து வாழ்வேனென்றால்! எப்படி?

அப்படி நினைத்து, நடந்து கொள்ளாமலிருந்திருந்தால், அமெரிக்க அதிபர், காட்டிய அலட்சியம், பொறுப்பின்மையால், இன்று, அந்நாட்டில், 82000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது போல், நமது நாட்டில் மட்டும், இது பரவியிருந்தால், உயிரிழப்புகள், மனித கற்பனைக்கெட்டாத அளவில் இருந்திருக்கும், என்று நினைத்தோமானால், நாம், நமது ஆன்ம பலத்தை இழந்துவிட்டோமேன்றே பொருள் (ஆன்ம பலமா? அப்படீன்னா? என்றால் அதற்கும் வருவோம், பின்வரும் பத்திகளில்).

தனக்கு வந்த பின்தான், இங்கிலாந்தின் பிரதமரே, இந்நோயின் ஆபத்தை உணர்ந்தார். அதற்கு முன்னர் வரை, சமூக இடைவெளியை, அவர் உதாசீனப்படுத்தினார் என்று கேட்டீர்களானால், அதுவும் சரிதான். இதையும் சேர்த்துக் கொண்டு வாருங்கள். மூன்றுக்கும் ஒரு விடையாய்க் காண்போம்.

சீனர்களின் நட்பு தேசம் இத்தாலி (அதனால்தான், கலைக்கப்பட்டிருக்க வேண்டிய, தேசிய விடுதலை இயக்கங்களின் முன்னோடியான, இந்நாள், எங்கிருக்கிறது என்று தேடப்பட்டு, எதிர்க்கட்சி (எதிர்க்கட்சி தகுதி! கூட அதற்கு உண்டா? என்பது, வேறு, கோடி ரூபாய்க்கான கேள்வி!) யின், தற்காலிக தலைமையும், சீன ஆதரவு நிலையும், சீனாவிற்கு சொம்பு தூக்குவதும், சீனாவின் அரசியல் சார்பு நிலையான, பெயரளவில் மட்டும், பொதுவுடமைக்காக, ஜால்ரா போடும், இந்திய இடதுசாரிக் கூடாரங்களும் (“RIGHT – சரியானவை”, என்பதை வலது என்று தப்பர்த்தம் செய்து கொண்டதனால் தான் என்னவோ, இவர்களை, இவர்களே, இடதுசாரிகள் என்று, அழைத்துக் கொள்கிறார்களோ?, அவ்வாறெனில் அது பொருட்குற்றமட்டுமல்ல, அடிப்படைக் குற்றமுங்கூட!) இத்தாலிக்கும், சீனாவிற்கும், எப்போதும், எந்நிலையிலும், பாராட்டுப்பத்திரம் மற்றும் ‘பண்’ பாடுகிறார்களோ?, அட! நமக்கு எதுக்கு இந்த அரசியல்? விசயத்திற்கு வருவோம்!) சீனர்களின் பண்பாட்டுப்படி, பொது வெளியில் கட்டிப்பிடித்துக் கொண்டதின் விளைவு, உலகிலேயே இந்நோய்க்கு, மடிந்தோரின் எண்ணிக்கையில் இரண்டாமிடம் என்பீர்களானால், இதோ ஒட்டுமொத்தமாக, மூன்று கேள்விகளுக்குமான பதில், இந்நோயின் தாக்கம் – பாதிப்பிற்கான முக்கிய காரணம், இந்நாடுகளில் நிலவி வந்த சீதோசன நிலையேயாகும்.

Lockdown 2020 – ஊரடங்கு 2020 / இந்தியா

நமது பாரத தேசத்தின், சராசரியான வெப்ப நிலை ’20டிகிரி செல்சியஸுக்கும்’ மேலாகும். எனவே, இந்நோய், பெரும் கொடிய நோயாக இருந்தாலும், இதன் தாக்கம், குறைவாகவேயிருக்கும்.

அடுத்தது, இந்தியர்களின் உணவு முறை மற்றும் வாழ்க்கை நடைமுறை (நவ நாகரீக நகரங்கள் தவிர) மிகவும் ஆரோக்கியமானதாகவே உள்ளது. உங்கள், ‘கலோரிகள்’ கணக்குகளையெல்லாம், குப்பையில் போடுங்கள்!. அதிலும் குறிப்பாக, தங்களது அன்றாட உணவு வகைகளில், மஞ்சளும், பூண்டும் சேர்க்காத, தமிழ்க்குடும்பங்களை, விரல் விட்டு எண்ணிவிடலாம்.

உங்களுக்கு, இன்னோர் பெரும் சோதனை உள்ளது. அது, வரும் குளிர்காலத்தில் சந்திப்பீர்கள்!. அப்போதும், இதேபோல், ‘தனித்திரு’, ‘விழித்திரு’, ‘விலகியிரு’ என்பீர்களானால், அதைவிட, இவ்வரசாங்கங்களின் செயலற்ற – கையாலாகாத்தனத்திற்கான சான்று, வேறெதுவும் இருக்க முடியாது.

ஆம்!

நேற்றுங்கூட, ஒரு தந்தை, மகனை தன் வாகனத்தில், பின்னால் அமர வைத்துக்கொண்டு செல்கையில், நடு சாலையில் துப்பிச்சென்றதும், மறித்துக்கேட்ட போது, முறை தவறி பேசியதும், இன்றுங்கூட, ஒரு ஆட்டோ ஓட்டுநர், சாலையில் துப்பிச் சென்றதும், அவர் வண்டியைத் தாண்டிக் கேட்டபோது, தலை குனிந்ததும், ATM வாசலில் நின்று கொண்டிருந்த வடமாநில இளைஞனொருவன், நின்ற இடத்தினருகே, துப்பியதும் நிகழ்ந்து கொண்டேதானுள்ளது.

ஊரடங்கை கண்டித்தால், ‘ஊரே’ முதலில், சரியில்லையே என்றால், அதற்கான பதிலையும் கீழ்வரும் பத்திகளில் காண்போம்.

 

Lockdown 2020 – ஊரடங்கு 2020

நன்மைகள்

இந்த ஊரடங்கினால் ஏற்பட்ட நன்மைகளை முதலில் காண்போம். மனிதர்கள், தமது கண்டுபிடிப்புகளுக்கு அடிமையாக மாறி, தத்தம் மன வலிமை, கொஞ்சம், கொஞ்சமாக, நவீன உலகம் என்ற போர்வையில் இழந்து கொண்டிருந்த வேளையில், நமது மூதாதையரின் வாழ்க்கை முறையே, மனித வாழ்வின் மேம்பட்ட நிலை என்பதையும், அது நமக்கு, ஆத்ம திருப்தி தரக்கூடியது என்பதையும், இந்த ஊரடங்கு நமக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

மக்கள், எவ்வாறு, பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரிந்து, நாம் மனிதர்கள், என்ற உணர்வை மறந்து வாழ முயன்றோம் என்பதை, திரும்பி பார்க்க வைத்துவிட்டது, இந்த ஊரடங்கு 2020 – Lockdown 2020.

 

மனிதம்

இவ்வூரடங்கின் மூலம் நாம் கற்றுக்கொண்டது புதிதாய், ஒன்றுமேயில்லை. ஆனால், கவனிக்க மறந்த மனிதத்தை, மனித வாழ்வின், உண்மைத் தேவையை, உணர்ந்து கொண்டோம். அதிலும், இந்தியாவின் பாரம்பரியமான, சக மனிதரின் மீதான கரிசனத்தை மீட்டுக்கொண்டோம்.

எல்லோருக்குமான பொதுத் துயரின் போதுதான், ஒற்றுமையின் அவசியத்தைப் புரிந்து கொண்டோம். தனித்திருந்தாலும், கூடியிருக்க உறுதிகொண்டோம். மனிதம் என்பது பிறர்க்கு உதவுவது ஒன்றேவா? இல்லை!, ஒவ்வொரு தனி மனிதனும், தத்தம் உடலை, உளத்தை, உறவைப் புரிந்து கொண்டு, உயிரில் சிறந்து விளங்க வேண்டியதின் அவசியத்தை இந்த ஊரடங்கு 2020 – Lockdown 2020 நமக்கு உணர்த்தியுள்ளது.

 

Lockdown 2020 – பார்வைகள்

அதே வீடு தான், அதே தெரு தான், அதே ஊர் தான், அதே மாவட்டம் தான், அதே மாநிலம்தான், அதே நாடு தான், அதே உலகம் தான், அதே அண்டம் தான், அதே உறவுகள் தான், அதே தோழமை தான், அதே தொழிலதிபர்கள் தான், அதே தொழிலாளர்கள் தான், அதே அரசாங்கங்கள் தான், அதே அரசு நிர்வாகிகள் தான், அதே அரசு ஊழியர்கள் தான், அதே காவல் அதிகாரிகள் தான், அதே துப்புரவுப் பணியாளர்கள் தான்!

ஆனால், எங்கும், எல்லோரிடமும் ஒரு புரிந்துணர்வு, பரிவு, அக்கறை மற்றும் ஆத்மார்த்தமான ஈடுபாடு ஆகியவற்றைக் கண்கூடாக காண முடிந்தது!

இதில் சிலரைத் தவிர்த்திருக்கிறேன்! அவர்கள் தள்ளி வைக்கப்பட வேண்டியவர்கள். அவற்றில் பிரதானமான இருவரைத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

முதலாவது, இங்கேயும், இப்போதும், அரசியல் சார்ந்தே செய்தி மற்றும் விசமம் பரப்பிய ஊடகங்கள் (தொலைக்காட்சி, வலை தள செய்தி நிறுவனங்கள் மற்றும் தனி நபர் செய்திப் பக்கங்கள்) மற்றும் இரண்டாவது, பிணத்தில் ஊன் தேடும் காகம் மற்றும் ஓநாய் கூட்டங்கள் போல் செயல்பட்ட, பல, அரசியல் கூடாரங்கள்.

இந்த ஊரடங்கு 2020 – Lockdown 2020 காலத்தில், இவ்விருவரையும் தவிர்த்து விட்டு பார்த்தோமேயானால், தனி மனிதர் ஒவ்வொருவருக்கும் இது நிச்சயம் திருப்புமுனைதான். 

 

மறந்துபோன மரகதங்கள்

ஒவ்வொருவரும், குடும்பத்துடன் எப்படி ஆக்கபூர்வமாக கலந்து, பங்கெடுப்பது?

ஒவ்வொரு தனி மனித வாழ்வின் சாதனைகள், எதை நோக்கி அமைய வேண்டும்?

போன்ற ஆன்மீக தேடல்களும், கணினி மற்றும் கைபேசியில் மட்டும் விளையாடி வந்த குழந்தைகள், பட்டம் விட்டு, வானம் தொட்ட நிகழ்வுகள், கட்டம் கட்டி, தாயக்கட்டை உருட்டி மகிழ்ந்த தருணங்கள், இருப்பதைக் கொண்டு வாழ்ந்து நெகிழ்ந்த நிம்மதி, மொத்தத்தில், இந்த ஊரடங்கு 2020 – Lockdown 2020 சிக்கனத்தை, மன வலிமையை, வாழ்வின் சின்னஞ்சிறிய சந்தோசங்களைத் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.

 

Lockdown 2020 – மனிதம் மீட்போம்

இவையெல்லாம் எங்கிருந்தன?

யோசித்து பார்த்தால், நாம் எவ்வாறு, ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு இடத்திலும், இயற்கையாய், பிரிந்து கிடந்திருக்கிறோம், இருக்கிறோம் என்பது அதிர்ச்சியும், அயர்ச்சியும் தருகிறது.

மனிதரின் நன்மைக்கும், மேன்மைக்கும் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் சாதனங்கள், மனிதரில் சில விசமிகளின், கீழ்த்தரமான வியாபார நோக்கிலான செயல்களால், மனிதர்களை அவர்கள் அறியாமலே, பல கிளைகளில் பிரிந்து வாட வைத்துள்ளது.

மனித மனதிற்கு, இணையான கண்டுபிடிப்பு, அண்டத்தில் வேறெதுவும் இல்லை. ஆனால், அம்மனதை, தற்காலிக சந்தோசங்களில் மூழ்க வைத்து, வியாபாரங்களுக்கு தேவையானபடி சலவை செய்து, மனிதரை மழுங்கடித்து விட்டனரே சில விசமிகள்.

நாம், மொழியால், இனத்தால், இடத்தால், பொருளால் மற்றும் மதத்தால் பல்வேறு பிரிவுகளால், மனிதம் தொலைத்து வாழ, பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழகத்தின் நிலை, இன்னும் படு மோசம். உலகின் மூத்த குடி, பல அந்நிய தேச (இந்திய தேச விரோத) கொள்கைகளுக்கும், சித்தாந்தங்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும் அடிமையானதில் முழு முதல் பங்கு, குறிப்பாக மூன்று துறைகளுக்கே சாரும்.

முதலாவது அரசியல், இரண்டாவது பொழுதுபோக்கு ஊடகங்கள் (முன்பு சினிமா, தற்போது தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் வலை தள பொழுதுபோக்கு பக்கங்கள்) மூன்றாவது செய்தி நிறுவனங்கள் (முன்பு செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள், தற்போது அரசியல் கட்சிசார், செய்தி தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் வலை தள செய்தி நிறுவனங்கள் மற்றும் தனி நபர் செய்திப் பக்கங்கள்).

புண்ணிய தேசம்

கோவில்களைப் பற்றி, மாற்று மதத்தினர் பேசுவதும் அல்லது வேற்று மதத்திற்கு பெண், பொன், பொருள் கருதி சென்றவர் பேசுவதும், நாட்டின் மூலமதை வேரறுக்க, கலை என்ற போர்வையில், கலவி புரியும் சில கயவர்கள் பேசுவதும், தாத்பரியம் அறியாமல், வெறும் காழ்ப்புணர்ச்சிக்காக பிதற்றுவதும், காலங்காலமாக நடந்து வரும் ஒரு செயல்தான்.

எனினும், நம் குழந்தைகள், நம்மிடமுள்ள குறைகளை மட்டுமே, நம்மிடம் பிடிக்காத விசயங்களை மட்டுமே பேசுவர் என்பது இயற்கை தானே. அது ஒன்றே சாட்சி, அவர்கள் நம் குழந்தைகள், நம்மவர்கள் என்பதற்கு! அவர்களுக்கு, நம்மைத் தவிர, வேறு அக்கறை இல்லை என்பதையும் இதில் இலைமறைகாயாக புரிந்து கொள்ளலாம்.

அந்த மட்டில், நடிக நடிகையர்கள், So Called Revolutionists cum Social Activists சொல்லும், நமது மத சம்பிரதாயங்களின் மீதான விமர்சனங்கள் மற்றும் நமது கோவில்கள் மீதான விமர்சனங்களும், அறிவீனத்தால் மட்டுமல்ல, அன்பினாலுமே நிகழ்ந்தவை.

எனவே, எந்த மத வாத – இன வாத சக்திகளின் பொங்கல்களுக்கும், நாம் பொங்கி விடாமல், நமது உயர்ந்த பெருந்தன்மையால், தனித்து, அவர்களின் அறிவீனத்தை மன்னித்து, அன்பினைப் புரிந்து சிறந்து விளங்கி நிற்போம்.

கூடுதலாக, அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு, நாம் சொல்ல விரும்புவதெல்லாம் இதுதான். நீங்கள் எந்த மதத்திற்கு வேண்டுமானாலும் சேவகம் செய்யுங்கள், எந்த மதத்தையும் பின்பற்றுங்கள், எந்தக் கடவுளையும் வணங்குங்கள், எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் செய்ய முயலுங்கள்; நீங்கள் சார்ந்திருக்கும் நிலைக்காக!

ஆனால் இந்தப் பிராந்தியத்தில் பிறந்த அனைவருமே இந்துக்கள் தான்! என்பதையும், அதை யாராலும் மாற்றவும் முடியாதென்பதையும் உணர்ந்துகொள்ளுங்கள்!

இதுவே, எதையும், அதனதன் குணாதிசயங்களோடே, அனுமதித்து, அவரவர் உரிமை – கடமை ஆற்ற வழிவகுக்கும் இப்புண்ணிய பூமியின் ஆன்ம பலமாகும். 

 

Lockdown 2020 – ஊரடங்கு 2020

தீமைகள் அல்லது சேதங்கள்

  • இந்த ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள தீமைகளையும், சேதங்களையும் அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.
  • உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நடைபெறும் குடியரசு, கடைபிடிக்கும் ஊரடங்கு 2020 – Lockdown 2020.
  • இந்த ஊரடங்கு 2020 – Lockdown 2020 மூலம், உலகின் முன்னோடியாக மாறி வரும் பாரத தேசம்.
  • இந்த உலகம், காணும் மிகப்பெரிய ஊரடங்கு 2020 – Lockdown 2020.
  • கிட்டத்தட்ட 130 கோடி மக்கள், சுய விருப்பத்தோடு, பொது நலனுக்காக ஏற்றிருக்கும் ஊரடங்கு 2020 – Lockdown 2020.
  • உலகிற்கே காப்பாளனாய், பாரதத்தை காட்டியிருக்கும் ஊரடங்கு 2020 – Lockdown 2020.

இது மாதிரியான செய்திகள் மற்றும் இதனால் ஒவ்வொரு இந்தியரின் மனதில் ஏற்படும் பெருமையும், கர்வமும் மட்டுமே, இவ்விந்தியரை மகிழ்வித்து விடாது தலைவரே!

 

Lockdown 2020 – தவிர்க்கப்பட வேண்டியன

சினிமா என்ற ஒரு பொழுதுபோக்கு (அது பல குடும்பங்களின் தொழில் – வாழ்வாதாரம்) நாட்டுக்கு தந்த பெருந்தீமைகளில் இதுவும் ஒன்று! Leadership Branding and False Propaganda.

மனித குலத்தின் மேம்பாட்டை அறிவியலும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் தான் செய்ய முடியும் என்ற மாயையை உருவாக்கிய, அதே அறிவியல் கண்டுபிடிப்புகள், மனிதரின் வீரத்தைப் புதைத்து, ஓடி ஒளிவதும் வீரமென்று நம்ப வைத்தது. மின்சாரம் மற்றும் ஒலி அலைகள் சம்பந்தமான கண்டுபிடிப்புகளே, மனித குலத்தின் மாபெரும் சாதனை என்றால், அது மிகையன்று.

முத்தமிழுக்குச் சொந்தக்காரர்களான நாம், அவற்றில் முதலாவதான இயல் மறந்து, இரண்டாவதான இசை தொலைத்து, மூன்றாவதான நாடகத்திலும், அதன் மெருகேற்றலான, நவீன கண்டு பிடிப்புகளால், தனி மனித திறமைகள் மழுங்கி, நம்முள்ளிருந்த படைப்புத்திறன் மரித்து, வெறும் செயற்கோர்வையே, பெரும் சாதனையாய், இம்முடங்கி விட்ட நிலை தந்தது.

செவிவழிச் செய்திகள், ஒவ்வொரு தனி மனிதனின், புரிந்துணர் திறன் மற்றும் மேம்பாட்டுக்கு வித்திட்டது. புத்தகங்கள், மனிதரின் அறிவு மற்றும் கற்பனைத்திறனை வானளவு பெருக்கியதென்றால், அது மிகையன்று.

ஆனால், தொலைக்காட்சியும், திரைப்படங்களும் மனிதரை கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையாய், அறிவிருந்தும் மூடராய் செய்ததென்றால், அதுவும் மிகையில்லை.

இவற்றால், மனித குலம், அடைந்த நன்மையை விட, தீமை கடலளவு பெரிது. இருந்தும் இல்லாததாய் செய்ததை விட, தவறாய், தீமை செய்ததே அதிகம். அறிவியல் கண்டுபிடிப்புகள் அதன் தேவைக்கு மேல், சேவை தருகையில், நஞ்சே என்பதற்கு சிறந்த உதாரணம் – அலைபேசிகள்.

பொதுக்கூடங்களிலும், வீடுகளிலும் மட்டுமிருந்த இத்தீமைகளை, செல்லுவிடமெல்லாம் கொண்டு சேர்த்த பெருமை அலைபேசிகளுக்கே சாரும்.

 

Lockdown 2020 – நிஜங்கள்

பல வருடங்களாக தமிழ் சினிமாவால், ஊழல் வாதிகளாக, செயல் திறனற்றவர்களாக, கொடியவர்களாக, பேராசைக்காரர்களாக, கோமாளிகளாகவே பெரும்பான்மையாக சித்தரிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்கள், அரசு நிர்வாகிகள், அரசாங்கங்கள் தத்தம் கடமையை சிறப்பாக பங்களிப்பு செய்த போதும், (சில மாநிலங்கள் – அரசியல் சார்பு நிலையால் தத்தம் மாநில மக்களுக்கே துரோகம் போன்றதொரு நிலையெடுத்ததை குறிப்பிட்ட (மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கேரளா) அந்த மக்களின் தீர்ப்பிற்கே விட்டு விடுவோம்) இந்த ஊரடங்கு 2020 – Lockdown 2020, இந்தியக் குடும்பங்களை கௌரவக் குறைச்சலான நிலைக்கே தள்ளியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.

ஏழைகள், நடுத்தர வர்க்கம், வசதி படைத்தவர்கள் என்று பிரிப்பதை விட, மக்களை நாமும்தான் தற்காலிகமாக சில பிரிவுகளுக்குள் பொறுத்த முயல்வோமே!

  • உழைக்க முடியாதவர்கள், குழந்தைகள், ஆதரவற்ற முதியோர்கள், உறைவிடமில்லா மக்கள், இவர்களை முதல் தர மக்கள் எனக்கொள்வோம்.
  • தினக்கூலிக்கு செல்லும் தொழிலாளர்கள், தின வியாபாரத்திற்கு செல்லும் சுய தொழில் முனைவோர், பிற தொழில் நம்பி வாழும் மனிதர்கள், இவர்களை இரண்டாம் தர மக்கள் எனக்கொள்வோம்.
  • மாத சம்பளத்திற்குச் செல்லும் பணியாளர்கள், குறு வியாபாரிகள் மற்றும் சுய தொழில் முனைவோர், இடைத்தரக வணிகர்கள், இவர்களை மூன்றாம் தர மக்கள் எனக்கொள்வோம்.
  • அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் (மத்திய, மாநில, காவல், இராணுவ, போக்குவரத்து, பொது, கடை நிலை முதல் முதல் நிலை வரை), வங்கி மற்றும் மருத்துவ ஊழியர்கள், இவர்களை நான்காம் தர மக்கள் எனக்கொள்வோம்.
  • தொழிலதிபர்கள், ஆளும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் (அரசியலும், அரசாட்சியின் பிரநிதித்துவமும் மக்களின் சேவையாக கருதப்பட்டதெல்லாம், அது ஒரு கனாக்காலம்) மற்றும் பரம்பரை பணக்காரர்கள், இவர்களை ஐந்தாம் தர மக்கள் எனக்கொள்வோம்.

 

இதில் ஒரேயொரு பிரிவினரை மட்டும் விட்டுவிட்டோம், இலாவகமாய்! அது விவசாயிகள். ஏனென்றால், அவர்கள் தெய்வங்கள். நாம் தெய்வத்திற்கு என்ன செய்வோம்? என்று தான், நமக்கே தெரியுமே! (பட்டை நாமம்தான்)

 

Lockdown 2020 – நிவாரணம்

மத்திய, மாநில அரசாங்கள், அறிவித்த நிவாரணங்களும், அவற்றை, அவர்கள் காலத்தே அறிவித்ததும், எல்லோருக்கும், எல்லாமும், எப்போதும், செய்ய முடியாதென்ற உண்மை உறைத்தபோதும், நடப்பு நிலை என்னவென்றால்…? போதாது!

இது அரசாங்கங்களின் மீதான விமர்சனமல்ல. எனினும், இதைச் செய்தால், இது தான் பாதிப்பு என்று தெரிந்த பிறகும், ஊரடங்கு 2020 – Lockdown 2020 தொடர்ந்ததே, மாபெரும் தவறு.

இந்த நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு வரவேண்டும். அதே சமயத்தில், இந்த நோயினிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய அவகாசமாக ஊரடங்கு 2020 – Lockdown 2020ன் முகல் பகுதியை ஏற்றுக்கொண்டாலும், அதே கருத்திற்குள் ஒளிந்து கொண்டு, காலம் கடத்தியதால், பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கூறப்பட்டவர்களில், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் தர மக்களே!

இவர்கள், அரசாங்கங்கள்  அறிவித்த நிவாரணங்களுக்காக, வரி நிற்க விரும்பா மாந்தர்கள் (உடனே, மற்றவர்கள் யாசகம் ஏற்பவர்கள் என்ற பொருளன்று. அவர்களை, அரசாங்கமும், மற்றவர்களும் இனங்கண்டு உதவ முடியும். ஆனால், இவர்களை?)

 

Lockdown 2020 – தலைமுறை

இதன் விளைவு என்னவென்று தெரியுமா தலைவரே? இவர்களின் சேமிப்புகளை, ஒரு தலைமுறை முன்னேற்றத்தை நசுக்கி விட்டீர்கள் தலைவரே! எம் தமிழ்நாடு உம்மை தேர்ந்தெடுக்கவில்லை!

எனினும், எங்கள் தலைவராய் (பாரதப் பிரதமராய் – மக்களாட்சியின் விந்தையான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று) உங்களை மதிக்கிறோம் (பாரதப் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில், மக்களின் நேரடி பிரநிதித்துவம் வரவேண்டும் – அது வேறு அரசியல், அதை வேறொரு பதிவில் காண்போம்).

மற்ற மாநிலங்களில் காணப்பட்ட விதி மீறல்கள் இங்கே இல்லை. ஏன் தெரியுமா? நாங்கள் பண்பாளர்கள். உடனே, இதுதான் திராவிட ஆட்சியின் சாதனை என்று சில சமூக விரோதிகள் மார்தட்டக்கூடும். (திராவிடம் என்பதை சிதைக்கும் போலிகளே, திராவிடத்தின் பெயரில் போலியாய் உலவி வருகின்றன. முதலில், திராவிடத்தை, இந்தப் போலிகளிடமிருந்து இனம் பிரித்துக் காட்ட வேண்டும், இன்னுமோர் பதவில்) 

நாட்டின் பாதுகாப்பு, மத்திய அரசாங்கத்தின் கையிலென்றாலும், மாநில அரசுகளையும், இணைத்துச் செயல்பட்ட உங்கள் நிர்வாகத் திறமை போற்றுதற்குரியது என்றாலும், இந்த ஊரடங்கு 2020 – Lockdown 2020, மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் அழித்து விட்டது.

 

Lockdown 2020 – உயிரா? உடைமையா?

உயிரை விடப் பொருள் பெரிதா? என்று கேட்குமளவிற்கு கொடிய நோயா இது. (எல்லாம், கட்டுக்குள் இருக்கும் இப்போது  சொல்வதற்கென்ன என்பீர்களானால், மீண்டும் முதல் பத்தியை மீண்டும் படித்துக் கொள்ளுங்கள்).

ஆம்! தலைவரே! உயிரோடிருந்தால் பொருள் சேர்க்கும் வழி செய்வோம் என்று, நீங்கள் சொல்லும் காலமும் கானலாகவே தோன்றுகிறது. மக்களுக்கு கிடைக்க வேண்டிய, கிடைக்கக்கூடிய சிறு சலுகைகளைக் கூட, வரி வைத்துப் பிடுங்கிக் கொள்கிறீர்களே தலைவரே!

நீங்கள் சொன்ன இரண்டு மாத தவணை  – கால அவகாசம், என்ன தவணை இரத்தா? இல்லையே? இன்றில்லாவிடினும், என்றாயினும் நாங்களே கட்டித்தானே தீர்க்க வேண்டும். உழைக்கும் வழி கட்டி, உருவிக்கொள்ளும் இவ்வித்தைக்கே, நீங்கள் அடுத்த தேர்தலில் அனுபவிக்க வேண்டும் என்று மனம் வேண்டுகிறது.

ஆனால், அறிவு என்ன சொல்கிறது தெரியுமா? இத்தாலிக்கும், சீனாவுக்கும் கூஜா தூக்கி, ஒரு “TUBELIGHT”ஐ தலைவரென்று அழைக்கும் இழிநிலை வந்து சேர்ந்து விடுமோ என்றே அச்சமும் வருகிறது! 

 

வாழ்க மக்களாட்சி! வாழ்க ஊரடங்கு 2020 – Lockdown 2020!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *